விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (Airport and Aviation Services (Sri Lanka) (Private) Limited) அறிவித்துள்ளளது.

இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆகிய திகதிகளில் வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு போலி வெடிகுண்டுமிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களை இறக்கி சோதனை செய்தனர்.

இதன்படி, குறித்த நடிவடிக்கயால் யாரேனும் அசௌகரியம் அடைந்திருந்தால் வருந்துகிறோம் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏராளமான இந்திய விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்திய விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக நேற்று மாத்திரம் சுமார் 80 போலி அறிவிப்புகள் வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலை காரணமாக, போலி அச்சுறுத்தல்கள் குறித்து செய்திகளை வழங்கும் நபர்களின் தகவல்களை மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது.