களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மாணவன் உயிரிழப்பு தொடர்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, உயிரிழந்த மாணவன் பல்கலைக்கழகத்தில் மதுபானம் அருந்தியதாக தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் | Death Of A Kelani University Student Information

நேற்றிரவு (22) மாணவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுபான விருந்து நடைபெற்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்பின் அனைவரும் விடுதிக்கு சென்றதோடு, மதுபோதையில் இருந்த மாணவனை சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அவரது அறையில் விட்டுவிட்டு, ஏனைய நண்பர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதன்படி, குறித்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் ஜன்னல் ஊடாக கீழே தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற அறையை நீதவான் பரிசோதிக்க உள்ளதாகவும், அரசாங்க பரிசோதகர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் உரிய இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவனான பிரின்ஸ் ராஜூ பண்டார என்ற சென்டா எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.