வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
சுற்றுலாத்துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஆனால் இதுவரை அவை இறக்குமதி செய்யப்படவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjit Siambalapittia) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் (finance minister) ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இவற்றில் 250 பேருந்துகள் மற்றும் 750 வான்கள் உள்ளடங்கும் என்றும் இதற்கு சுற்றுலா அமைச்சகத்தின் அனுமதி தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வாகன இறக்குமதி குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு ஜூலை 4ஆம் திகதி கூடி அதன் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நாணய மாற்று வீதத்தை பாதிக்காத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது சாத்தியமானதாக அமையூம் என தான் நம்புவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பொது போக்குவரத்து வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், பிற போக்குவரத்து சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண வாகனங்கள், மற்றும் தனியார் வாகனங்கள் ஆகியவையே இறக்குமதி தடை நீக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.