
மன்னாரில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை: வெளியான காரணம்..!
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்றைய தினம் (17.06.2023) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தருடைய 23 வயதான சகோதரர் ஒருவர் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இதன்போது நேற்றைய தினம் காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற 23 வயதுடைய குறித்த இளைஞனைக் குறித்த யுவதியின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சகோதரர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் அறிந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த யுவதியின் உறவினர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியுள்ளது.
இந்த கை கலப்பில் குறித்த இளம் குடும்பஸ்தர் சகோதரர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.