தனிமையில் வசித்து வந்த பெண் மரணம்

தனிமையில் வசித்து வந்த பெண் மரணம்

கல்குடா வீதி வாழைச்சேனையில் தனிமையில் வீடொன்றில் வசித்து வந்த பெண் ஒருவரின் சடலத்தை உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி பாஸ்கரன் சற்குணதேவி வயது (52) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக தமது சகோதரியின் தொலைபேசி அழைப்பு துண்டித்து காணப்படுவதாகவும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லையென அவரை தேடிப் பார்க்கும்படி வவுனியாவில் உள்ளவர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வசிக்கும் தமது உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அவர் இன்று காலை பிரதேச கிராம சேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிசாரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் சடலத்தினை கண்டு பிடித்துள்ளனர்.

இவர் கடந்த 10 வருடங்களாக மலேஷியா நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வாழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார். தான் வசித்து வந்த வீட்டினை விற்பனை செய்து விட்டு வவுனியா திரும்பும் நிலையில் வீட்டினை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை தமக்கு கவலையளிப்பதாக சகோதரி தெரிவிக்கிறார்.

கணவர் யாழ்ப்பான பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி வருகின்றார் என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.