ஐந்து மாதங்களாக 100 கோடி ரூபா பெறுமதியான சீனி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

ஐந்து மாதங்களாக 100 கோடி ரூபா பெறுமதியான சீனி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட 100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட சீனி கொள்கலன்கள் துறைமுகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள 300 கொள்கலன்களில் 7,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிக தொகை சீனி காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தாமதக் கட்டணமாக பெருந்தொகையான பணம் செலுத்தவேண்டியேற்பட்டுள்ளதால் சீனி கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐந்து  இறக்குமதியாளர்களால் 5  மாதங்களுக்கு முன்னர் 400 கொள்கலன்களில், 12, 000 மெட்ரிக் டன் சீனி இறக்குமதி செய்யப்பட்டது.

அரசாங்கத்தினால் சீனி இறக்குமதியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானம் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக இந்த சீனி கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதில் தாமதல் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர், அதன் பிரதிபலனாக இந்த சீனி கொள்கலன்கள்  சதொச வலையமைப்புக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கமையவே, சில வாரங்களுக்கு முன்னதாக 5,000 மெட்ரிக் டன் சீனி அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது.