நோயாளர் காவு வண்டி விபத்து: காயமடைந்த 4 பேரில் ஒருவருக்கு கொவிட்!
ஹக்மன - வலஸ்முல்ல பகுதியில் இன்று (25) அதிகாலை நோயாளர் காவு வண்டியொன்று மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த சுகாதார பணியாளர்கள் நால்வர் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையிலிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை அழைத்துச் சென்று மீண்டும் வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு திரும்பியபோது இன்று அதிகாலை ஒரு மணியளவில் நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கும், பின்னர் அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.
அதேவேளை, காயமடைந்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள ஹக்மன காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.