
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி - 9 படகுகள் உட்பட 12 மீனவர்கள் கைது!
முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கடற்படையினருடன் இணைந்து கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் இன்று ஈடுபட்டனர்.
இவ்வாறு இன்று(28) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நாயாறு கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற்றும் வெளிச்சம் பாய்ச்சி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 படகுகளும் 12 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
நாயாறு பகுதியைச் சேர்ந்த 3 படகுகளும், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருபடகும், கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த ஐந்து படகுகளிலுமாக - 12 தொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 12 பேரும், படகுகளும் இன்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 12 பேரையும் நீதிமன்றம் ஆட் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.