யாழ்.நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கேதீஸ்வரன்!

யாழ்.நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கேதீஸ்வரன்!

யாழ்.மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பி.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருக்கின்றார்.

தற்போதைய நிலமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு விளக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 1 ஆவது தொகுதி பி.சி.ஆர் முடிவுகள் இன்று வெளியானது.

அதில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வது தொகுதி இன்று மாலை வெளியாகும். அதனடிப்படையில் தொற்று இனங்காணப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை முதல் திறக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமண மண்டபங்கள், திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்தும் நீடிக்கும். மேலும் பாடசாலைகள் முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று 19 ஆம் திகதியே ஆரம்பமாகும் எனவும் பணிப்பாளர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்