விளையாட்டு வினையாகியது! பரிதாபமாக பலியான இளைஞன்

விளையாட்டு வினையாகியது! பரிதாபமாக பலியான இளைஞன்

செம்பியன்பற்று கடலில் படகுச் சவாரியின் போது கடலில் தவறி விழுந்த நிலையில் இயந்திரத்தின் விசிறியால் வெட்டப்பட்டு இளைஞன் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச் சேர்ந்த கெனடி பிரின்ஸரன் (வயது-24) என்ற இளைஞனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்று படகுச் சவாரி சென்றுள்ளார். இதன்போது, குறித்த இளைஞன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். இந்நிலையில் படகின் இயந்திரத்தின் விசிறிக்குள் இளைஞன் அகப்பட்டதுடன் கடலில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து, சுழியோடிகளின் உதவியுடன் சுமார் இரண்டு மணிநேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.