கூட்டு ஒப்பந்தத்தில் மீள இணைவது குறித்து பரீசீலிக்க தயார் - முதலாளிமார் சம்மேளனம்

கூட்டு ஒப்பந்தத்தில் மீள இணைவது குறித்து பரீசீலிக்க தயார் - முதலாளிமார் சம்மேளனம்

தொழிற்சங்கங்கள், வேதன நிர்ணய சபையில் இருந்து விலகி, மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் எனக் கோரினால், அதற்கு தமது தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நானுஓயா - இரதல்லயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுறை இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, ஆயிரம் ரூபா, நாளாந்த வேதனமாக வழங்கப்படும்.

ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில், முதலாளிமார் சம்மேளனம் சில யோசனைகளை முன்வைத்திருந்தது.

எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, தொழிற்சங்கங்கள் வேதன நிர்ணய சபையினை நாடின.

அதனாலேயே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகும் நிலை ஏற்பட்டது.

பெருந்தோட்டத் தொழிற்துறையினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதனைக் கருத்திற்கொண்டே அந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனவே, அந்த ஒழுங்குமுறையில்தான் சிக்கல் நிலை உள்ளது.

இந்த நிலையில், தொழிற்சங்கங்கள், வேதன நிர்ணய சபையில் இருந்து விலகி, மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் எனக் கோரினால் அதற்கு தமது தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என அதன் பேச்சாளர் ரொஷான் இராஜதுறை தெரிவித்துள்ளார்.

முதலாளிமார் சம்மேளனம் கூடி அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்