சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த விண்ணப்பங்களை நேற்று (03) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களும் தத்தமது பாடசாலை அதிபர்கள் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றுக்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியைப் பதிவிறக்கம் செய்து, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சமர்ப்பிப்பதற்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இப்பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியாது என்பதுடன், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.