கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்- சடலத்தை தாங்கியவாறு வீதியில் நின்று நீதிகோரிக் கதறிய உறவுகள்!

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்- சடலத்தை தாங்கியவாறு வீதியில் நின்று நீதிகோரிக் கதறிய உறவுகள்!

வவுனியாவில் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை தாங்கியவாறு பொதுமக்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் உண்மைத்தன்மையும் நீதியும் நிலை நாட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்று முன்தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராம மக்கள் இன்று ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி மதியம் 2 மணியளவில், வீட்டில் இருந்து ரியூசன் செல்வதாக தெரிவித்துவிட்டு அயல்வீடு ஒன்றிக்கு விளையாட சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். அதனையடுத்து பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டதில், மறுநாள் காலை அயல்வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை சிறுவனின் புத்தகப்பை கிணற்றிற்கு அண்மையில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்கலில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக முன்னர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அச்சிறுவனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஓமந்தை பொலிசார், நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த சிறுவனின் இறுதிகிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போதே கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் சடலத்தினையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்தது மரணமா? கொலையா? நீதித்துறை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காதது ஏன், இப்படி ஒரு குடும்பம் இந்த ஊருக்கு தேவையில்லை என்ற பதாதைகளை ஏந்தியபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.