தயாளினி திலீபன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் தொடர்பான கொலை வழக்கில், சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான தகவல்கள் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
விரிவுரையாளரின் வீட்டிலேயே குறித்த குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவரின் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் எஸ். லெனின்குமார் இதனை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை தொடர்ந்த நீதிவான், வழக்கை எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தையும் அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகினார்.
முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஆஜராகினார். இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தார்.