
நீர்கொழும்பில் வர்த்தகருக்கு உறுதியானது கொரோனா! வர்த்தக நிலையங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்
நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வியாபாரி ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இன்று முற்பகல் 9 மணியளவில் மாநகர சபையின் பொது சுககாதார பிரிவினர் சகல கடைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இங்கு அமைந்துள்ள 200 இற்கும் மேற்பட்ட கடைகள் தற்போது மூடப்பட்டு மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகியோரே கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் கொரோனா உறுதியானதை அடுத்தே கடைகள் யாவும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த சுப்பர் மார்க்கட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களும் நாளை காலை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார்.