திருகோணமலையில் கொரோனா தொற்றுக்குள்ளான யுவதி! தனிமைப்படுத்தலுக்குள்ளான பாடசாலை மாணவர்கள்

திருகோணமலையில் கொரோனா தொற்றுக்குள்ளான யுவதி! தனிமைப்படுத்தலுக்குள்ளான பாடசாலை மாணவர்கள்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 41 பேரை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தியுள்ளதாகவும், மேலும் ஐவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டதையடுத்தே ஊடகங்கள் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே கந்தளாய் பிரதேச கொரோனா குழு ஊடாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்த எண்ணியதாகவும் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை மூலமாக கந்தளாய் பிரதேசத்தில் யூனிட் 11, கந்தளாவ பகுதியைச் சேர்ந்த யுவதியொருவருக்கே கொரோனா பொசிட்டீவ் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றும் 41 பாடசாலை மாணவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும், இம் மாணவர்கள் கந்தளாய் பகுதியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனியார் வகுப்புக்கு சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இச்செயற்பாடுகள் கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார்.

கந்தளாயில் பொது மக்களை முகக்கவசம் அணியுமாறும் அனைத்து பொது இடங்களிலும் பொது மக்கள் கைகளை சுத்தப்படுத்துவதற்கான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் பொலிஸார், சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுத்து வருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.