இந்தியாவை நோக்கி கொண்டு சென்ற நியூ டயமன்ட் கப்பல் திசைமாறி பயணித்தமைக்கான காரணம்

இந்தியாவை நோக்கி கொண்டு சென்ற நியூ டயமன்ட் கப்பல் திசைமாறி பயணித்தமைக்கான காரணம்

தீப்பற்றிய நியூ டயமன்ட் கப்பல், இந்தியாவை நோக்கி கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது தற்போது மத்திய கிழக்கு சமுத்திர பரப்புக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் உள்ள மசகு எண்ணெய்யை, வேறு கப்பலுக்கு மாற்றும் நோக்கில், வந்த மார்க்கத்தின் மூலமே அதனை மீள கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில், அந்தக் கப்பலை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன, முன்னதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், நியூ டயமன்ட் கப்பல், மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி கொண்டுசெல்லப்படுகின்ற நிலையில், கடற்படைக்கு சொந்தமான சமுதுர மற்றும் சசுறு என்ற இரண்டு கப்பல்கள் அந்தப் பணியில் இணைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல், இலங்கை கடற்பரப்பை கடந்து, சர்வதேச கடல் எல்லையை சென்றடைவதற்கு மேலும் 4 நாட்கள் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு இழப்பீட்டையும், செலவுகளையும் வழங்குவதாக வெளியிட்ட உறுதிப்பாட்டுக்கு அமைய, தீப்பற்றிய எம்.ரி நியூ டயமன்ட் கப்பலை கொண்டுசெல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றலுக்கு உள்ளான எம்.டி.நிவ் டயமன்ட் கப்பலின் நிறுவனத்திடம் கோரப்பட்ட 442 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பலின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.