அம்பாறையில் கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது

அம்பாறையில் கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கிய சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவிற்கு காயம் ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்ற இருவர், அங்கு கடமையில் இருந்த வைத்தியருடன் முரண்பட்டுள்ளனர்.

பின்னர் நோயாளியுடன் வந்த நபரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம், சிறு கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் சிறு காயங்களுக்கு உள்ளான வைத்தியர், அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 41வயதுடைய சந்தேகநபர் வைத்தியரின் முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை, இன்று  கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 43வயதுடைய மருதமுனையை சேர்ந்த மருத்துவர் ஒருவரே காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.