குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கை எதிர்வரும் 2021 முன்னெடுக்கப்படும்!

குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கை எதிர்வரும் 2021 முன்னெடுக்கப்படும்!

நாட்டின் குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் 10 வருடங்களுக்கு ஒருமுறை, குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கணக்கெடுப்பு கட்டளை சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையின் மூலம், தேசிய கொள்கைகளை வகுப்பதற்கும் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் தேவையான மக்கள் தொகை, அதன் புவியியற் பரம்பல், இன ரீதியான பரம்பல் மற்றும் மக்கள் தொகை, புள்ளி விபரங்கள், சமூகப் பண்புகள், வீடுகளின் தரம் உள்ளிட்ட விடயங்கள், தற்போதைய தரவுகள் ஆகியன கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் வழங்கப்படும்.

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இதன் காரணமாக, நாட்டின் குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கையின் திட்டமிடல் செயற்பாடுகள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு கணக்கெடுப்பு செயற்பாடு, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு தரவுகளை விளம்பரம் செய்யும் நடவடிக்கைகள், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு மே வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கணக்கெடுப்பு திட்டப் பணிகளில் காணப்படும் தகவல்களின் சரியான தன்மையை உறுதி செய்யும் கணக்கெடுப்புக்குப் பிந்திய ஆய்வு, எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.