முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை – டக்ளஸ்

முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை – டக்ளஸ்

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி பதில் அமர்வில் கலந்து கொண்டு பதில் அளிக்கையிலேயே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

‘நீண்டகாலமாக தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கு கடற்பரப்பில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களும் பருவ காலங்களில் தென்னிலங்கையில் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கடலில் தொழிலில் ஈடுபடுகின்ற பூர்வீக உரிமையுடைய தென்னிலங்கையை சேரந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

அனுமதி வழங்கப்பட்டிருப்பவர்களுக்கும் மேலதிகமானோர் உள்ளூர் கடற்றொழிலாளர்களுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடக்கின் பூர்வீக கடற்றொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இவற்றை நீக்குவதற்காக தேசியக் கொள்கை ஒன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. குறித்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது’ என்று தெரிவித்தார்.

மேலும்,இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் காரணமாக வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துiராயாடி வருகின்ற நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் குறித்த அத்துமீறல்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.