இராணுவ சோதனைச் சாவடிக்கருகில் இடம்பெற்ற தொடர் வாகன விபத்து!
வவுனியா - கண்டி ஏ9 வீதி பூவயா இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் நான்கு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று காலை மதவாச்சி ஏ9 வீதி பூவயா பாலம் அருகே நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், வாகனங்கள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவை நோக்கி பயணித்த வாகனங்களை பூவயா பாலம் அருகே காணப்படும் இராணுவ சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொண்டிருந்த மூன்று வாகனங்கள் மீதே லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இராணுவ சோதனை சாவடியின் முன்பாக லொறி, கப்ரக வாகனம், ஹயஸ் வாகனம் மூன்றும் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் கப்ரக வாகனத்துக்கும், ஹயஸ் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.