
மனச்சாட்சியை சில்லறைகளுக்கு விற்கும் தரப்பு நாம் கிடையாது: சபையில் ஆவேசம்!
மக்களின் ஜனநாயகம், நாடாளுமன்றின் கௌரவத்தை இல்லாதொழிக்கும் வகையில்தான் 20ஆவது திருத்தச்சட்டமூலம் இன்று கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதற்கான எதிர்ப்பினை நாம் இவ்வேளையில் பதிவு செய்துக் கொள்கிறோம். எமது மனச்சாட்சியை சில்லறைகளுக்கு விற்கும் தரப்பு நாம் கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருத்தச்சட்டமூலம் தொடர்பாக சஜித் பிரேதாஸ மேலும் தெரிவிக்கையில்,
20 இன் ஊடாக ஆணைக்குழுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தனிக்கை ஆணைக்குழு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பு சபையை இவர்கள் இல்லாதொழித்துள்ளார்கள். பொலிஸ் ஆணைக்குழுவுக்கான அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு பொம்மையாக மாற்ற நாம் விரும்பவில்லை. நாம் ஜனநாயகத்தை பலப்படுத்துவே இவ்வாறு எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகிறோம்.
19இல் குறைகள் உள்ளமையை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எனவே, இவற்றை நிவர்த்தி செய்து 19ஐ பலப்படுத்தி, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தவே நாம் முயற்சிக்க வேண்டும்.
அதைவிடுத்து தனிநபரை பலப்படுத்த திருத்தச் சட்டமொன்றைக் கொண்டுவரக் கூடாது. 20ஆவது தொடர்பாக ஆராய குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
எனினும், இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை புறந்தள்ளி, திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளாமல் தான் 20ஆவது திருத்த கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விழுந்த மரண அடியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.