பண்டைய சிங்கள ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள்! சரத் வீரசேகர புதிய தகவல்
பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மாகாண சபைகளின் எல்லைகளை மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு இடையில் மாகாண சபை முறைமை இல்லாமல் செய்ய வேண்டும் என தென்னிலங்கையில் பரவலாக பேசப்படுகிறது.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
தற்போதைய மாகாண சபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்ற யோசனை என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன.
மாகாண சபைகளை இல்லாமல் செய்வது என தீர்மானிக்கப்பட்டால் நாட்டை ருகுணு, மாயா, பிகிட்டி என்ற மூன்று மாகாணங்களாக பிரிக்கவேண்டும் என்ற யோசனையும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக புதிய மாகாண சபைகள் தெரிவு செய்யப்படாத நிலையில் மாகாண சபை முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுவொருபுறமிருக்க, இந்திய தூதுவரை சந்தித்து 13 வது திருத்தம் குறித்த கரிசனையை வெளியிடவுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.