ரணில், சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலை!

ரணில், சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எம்.ஏ. சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான டொக்டர் நிஹால் ஜயதிலக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, கடந்த 4 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சுமார் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார்.

திவிநெகும, திணைக்களமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், தாமாகவே பணியிலிருந்து விலகிய தொழிலாளர்களுக்கு இழப்பீடு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளையும் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிவாரணங்களையும் வழங்கியதாகத் தெரிவித்து தம்மைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்தமையானது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையெனத் தெரிவித்து வைத்தியர் நிஹால் ஜயதிலக்க ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தார்.

இந்த முறைப்பாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இரா.சம்பந்தன், மலிக் சமரவிக்ரம, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.