உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் தான் முதலிடம் : முதல்வர் பழனிசாமி
உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வி பெறுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நாட்டில், உயர்கல்வி வழங்கும் கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முன்னோடி திட்டங்களால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளின் விகிதம் தமிழகத்தில் 49% உயர்ந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி அவசியம் தேவை எனவும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
அறிவும், ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என மாணவர்களுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா பொது முடக்கக் காலத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.