24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு நோய்த்தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 52 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41.12 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிய நோயாளிகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 52,14,678 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,174 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40,25,080ல் இருந்து 41,12,552 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 87472 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,17,754  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரிழப்பு 1.63 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவீதமாக உள்ளது.