இலங்கை-பங்களாதேஷ் தொடர் நடைபெறுவதில் சந்தேகம்
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
இலங்கை வரும் பங்களாதேஸ் அணி வீரர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் காலம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படாமை இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி வீரர்கள் இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
எனினும் தனிமைப்படுத்தலுக்காக 7 நாட்கள் மாத்திரமே தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ள பங்களாதேஷ் கிரிக்கட் அணி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானால் ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் தொடருக்கு ஆயத்தமாக ஒருவார கால மாத்திரமே இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையின் கீழ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பது கடினமான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் பங்களாதேஷின் கோரிக்கை தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி மீண்டும் பரிசீலிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு அறிவுறுத்தியுள்ளார்.