முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண்மை துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் கீழ், 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான முதலீடுகளுக்கு மேற்படி வரிச் சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், தகுதி பெறும் திட்டங்கள் குறைந்தது 50 உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தகுதிவாய்ந்த முதலீடுகளுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான பெருநிறுவன வருமான வரி விலக்குகள் வழங்கப்படும்.
இதேவேளை, திட்டங்களுக்குத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச் சலுகைகள் பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.