இந்தியாவில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது.

தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை கடந்துவரும் நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்தை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், 46,59,985 ஆக இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 1,201 பேர் மரணம் அடைந்துள்ளனர் எனவும் இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 இலட்சத்து 24 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 81533 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தற்போது நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் 9 இலட்சத்து 58 ஆயிரம் 316 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.