
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33.98 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 43,70,129 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1115 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73890 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,23,950ல் இருந்து 33,98,844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 74894 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,97,394 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.70 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.65 சதவீதமாகவும் உள்ளது.