யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகளை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய சந்தேகநபர்

யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகளை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய சந்தேகநபர்

யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்க்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் சாவகச்சேரி தகவல் வெளியிட்டுள்ளனர்.

மீட்க்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒருகோடியே 50 இலட்சம் ரூபா என சாவகச்சேரிப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட நகைகளை அடகு வைத்து பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

சிசிரிவி காணொளி

இது குறித்து தெரிய வருகையில், கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சிசிரிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகளை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய சந்தேகநபர் | Stolen Jewelry Jaffna That Was Pawned Is Recovered

அதன்போது யாழ். நகரில் வைத்து நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் (22) கைது செய்யப்பட்டார்.

பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர், கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத் திருடியமை தெரியவந்தது.

அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் 

அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகளை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய சந்தேகநபர் | Stolen Jewelry Jaffna That Was Pawned Is Recovered

அதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்

இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு வருவதற்கான உத்தரவையும் காவல்துறையினர் பெற்றனர்.

அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண் தங்க நகைகளையும், யாழ். நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17 பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.