குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

அனுராதபுரம், பழைய மிகிந்தலை வீதி, கங்கபட மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) காலை பனை நுங்கு தேடுவதற்காக அனுராதபுரம் ஜேத்தவனாராமயவிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோதே இவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னர் வீடு திரும்பிய அவர், அரசு வைத்தியசாலைக்குச் செல்லாமல் தனியார் வைத்தியசாலை ஒன்றிற்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு அவருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்டதுடன், குடிப்பதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டு அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இருப்பினும், இன்று அதிகாலை வீட்டிற்கு வெளியே வந்த அவர், வீட்டின் முன் கதவுக்கு அருகில் தரையில் விழுந்து கிடந்ததை குடும்பத்தினர் கண்டுள்ளனர்.

அச்சமயத்திலேயே அவர் உயிரிழந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.