நிலவின் தென் துருவத்தில் பனி நீரைத் தேடும் சீனா: நீர் வளத்தை ஆராய விசித்திர முயற்சி

நிலவின் தென் துருவத்தில் பனி நீரைத் தேடும் சீனா: நீர் வளத்தை ஆராய விசித்திர முயற்சி

நிலவின் தென்துருவத்தில் உள்ள நிரந்தர இருள் நிறைந்த பள்ளங்களில் உறைந்துள்ள பனி நீரைத் (Water Ice) தேடுவதற்காக, சீனா தனது 'சாங் இ-7' (Chang’e-7) விண்கலத்தை ஏவுதளத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

சூரிய குடும்பத்தின் மிகவும் தீவிரமான மற்றும் இதுவரை ஆய்வு செய்யப்படாத நிலவின் தென்துருவத்தில் நிரந்தர இருள் சூழ்ந்த பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக, சீனா தனது லட்சியத் திட்டமான 'சாங் இ-7' விண்கலத்தை ஏவுதளத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து 'லாங் மார்ச் 5' ராக்கெட் மூலம் திங்கள்கிழமை விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், சீனாவின் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலான நிலவுப் பயணமாகும். பல பில்லியன் ஆண்டுகளாகச் சூரிய ஒளியே படாத பகுதிகளில் உறைந்துள்ள பனி நீரைத் (Water Ice) தேடுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

நிலவின் தென்துருவத்தில் நேரடியாகத் தரையிறங்க முயற்சிக்கும் முதல் விண்கலமாக 'சாங் இ-7' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் சுற்றுப்பாதை அடைந்ததும், சாத்தியமான தரையிறங்கும் இடங்களை ஆய்வு செய்து, குறிப்பாக 'ஷேக்ள்டன்' பள்ளத்தின் விளிம்பிற்கு அருகிலுள்ள பகுதிகளில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் கேமராக்கள், ரேடார்கள் மற்றும் நீர் பகுப்பாய்விகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சக்கரங்களைக் கொண்ட வழக்கமான ரோவர்களால் செல்ல முடியாத கரடுமுரடான பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்வதற்காக, இதில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய ரோபோடிக் தத்திச் செல்லும் ஆய்வுக் கருவி (Hopping probe) இடம்பெற்றுள்ளது.

நிலவின் தென்துருவம் முரண்பாடுகள் நிறைந்த ஒருபகுதியாகும். அங்குள்ள பள்ளங்களின் விளிம்புகளும் உயரமான சிகரங்களும் தொடர்ச்சியான சூரிய ஒளியைப் பெறுகின்றன; ஆனால் ஆழமான பள்ளங்களோ நிரந்தர இருளில் மூழ்கியுள்ளன. இத்தகைய இருண்ட பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 203 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும், இது சூரியக் குடும்பத்தின் மிகக் கடுமையான குளிர்ப் பகுதிகளில் ஒன்றாகும்.

இயற்கையான உறைவிப்பான் போலச் செயல்படும் இப்பள்ளங்களில், பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நீர் பனி மற்றும் ஆவியாகக் கூடிய பிற சேர்மங்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இங்கு நீர் ஆதாரம் கண்டறியப்பட்டால், அது எதிர்கால விண்வெளி ஆய்வுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நிலவில் கிடைக்கும் நீரை குடிநீராகவும், சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனாகவும், ராக்கெட் எரிபொருளாகவும் மாற்ற முடியும். இதன் மூலம் பூமியிலிருந்து நிலவுக்குத் தேவையான வளங்களைக் கொண்டு செல்வது வெகுவாகக் குறையும்.

'சாங் இ-7' விண்கலத்தின் ஹாப்பர் கருவி, சிறிய உந்துவிசைக் கருவிகளைப் பயன்படுத்தி இருண்ட பள்ளங்களுக்குள் இறங்கி, சிறப்பு உபகரணங்கள் மூலம் நீர் மூலக்கூறுகளைத் தேடும். தனது ஆய்வுகளை முடித்த பின்னர், அது மீண்டும் சூரிய ஒளி படும் பகுதிக்குத் தத்தி வந்து தனது மின்கலன்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும். இந்த ஆய்வுக் காலத்தில் இக்கருவி குறைந்தபட்சம் மூன்று முறை தத்திச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விரிவான நிலவு ஆய்வுத் திட்டங்களுக்கு இந்த விண்கலம் மிக முக்கியமான படியாகும். 'சாங் இ-7' மற்றும் 2029-ல் திட்டமிடப்பட்டுள்ள 'சாங் இ-8' ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும் தகவல்கள், 2030-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் சீனாவின் திட்டத்திற்கும், தென்துருவத்தில் அமைக்கப்பட உள்ள சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்திற்கும் (ILRS) வலுவான அடித்தளத்தை அமைக்கும்.

நிலவின் பனி வளங்களைக் கைப்பற்றுவதற்கான உலகளாவிய போட்டியில் சீனா தற்போது தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. கடந்த 2023-ல் இந்தியாவின் 'சந்திரயான்-3' விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே வெற்றிகரமாகத் தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், நாசா (NASA), ரஷ்யா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவையும் இதே பகுதியை இலக்காகக் கொண்டு அடுத்தடுத்த திட்டங்களைத் தீட்டி வருகின்றன. சீனாவைப் பொறுத்தவரை, 'சாங் இ-7' என்பது வெறும் நிலவுப் பயணம் மட்டுமல்ல; பூமியைத் தாண்டி விண்வெளியில் மனிதர்கள் தங்களது நிரந்தரத் தளத்தை அமைப்பதற்கான ஆதாரத்தை நோக்கிய ஒரு தீவிரத் தேடலாகும்.