யாழில் வீட்டிலிருந்து வந்த தூர்நாற்றம் - சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த நபர் கொலை
சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளை கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூர்நாற்றம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், 2 மாத கால விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தமது சொந்த வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேற்று (16) அது தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் காவல்துறையினர் வீட்டுக்கு சென்ற போது அங்கு தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, குறித்த நபரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்கள் சேதமாக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேதமாக்கப்படுவதற்கு முன்னர் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்த நிலையில் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல் ஒன்று உள்நுழைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபரின் வீட்டிற்குள் புகுந்தவர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களை சேதமாக்கிய பின்னர், அவரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை உயிரிழந்தவரின் உடலின் 8 இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.