பலத்த பாதுகாப்புடன் பக்திபூர்வமாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு ஆராதனைகள்
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழாவினை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள தேவாலயங்களில் சனிக்கிழமை இரவு விசேட நள்ளிரவு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் பக்திபூர்வமாக இடம்பெற்றன.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரதான ஈஸ்டர் ஆராதனை, மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்தத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பாஸ்கா திரி ஏற்றப்பட்டு, புனித நீர் மந்திரிக்கும் சடங்குகள் இடம்பெற்றன. தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்களுக்கு ஆசி வழங்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்காக இதன்போது விசேட அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் தேவாலயங்களைச் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பெருமளவிலான பொலிஸார் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வாகனங்கள் ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், விசுவாசிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.






இதேவேளை ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை விடுத்துள்ள செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்
ஆண்டவருடைய உடைகளை அவர்கள் உரிந்த போது நமக்குக் கிடைக்கும் செய்தி என்னவென்றால், இந்த உலகம் உரியப்பட வேண்டியது என்பதாகும். உலகத்தை நாங்கள் வெல்லும்போதுதான் உயிர்ப்பின் முழுமையான மகிமையில் பங்கேற்கின்றோம்."
கடந்த 40 நாட்கள் நாம் மேற்கொண்ட தவக்கால வாழ்வைச் சிலுவை வாழ்வாகக் கொண்டு, அதன் மூலம் உயிர்ப்பின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
இயேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணிகள் பிசாசையும், உடல் தசை மனித இச்சையையும் குறிக்கின்றன.
இவை இரண்டையும் சிலுவையில் அறைந்ததன் மூலம் அது மீட்பின் சின்னமாக மாறியது.
கல்லறைக்குள் கடவுளை அடக்க முடியாது என்பதை உயிர்ப்பு உணர்த்துகிறது. இந்த ஆண்டு நீதியோடும், அன்போடும், சமத்துவத்தோடும் கூடிய வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் இந்த உயிர்ப்புப் பெருவிழாவில்,
பல இடங்களிலும் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
