கஹவத்தையில் மாணிக்கக்கல் வர்த்தகர் மாயம்
கஹவத்தை - நீலகம வீதியில் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர் கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (28) நண்பகல் வேளையில், இந்த மாணிக்கக்கல் வர்த்தகர் கஹவத்தை - நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது மோட்டார் சைக்கிள் கஹவத்தை - நீலகம வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அவரது கைபேசி அந்த வீதிக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், அந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.