இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா, மன்னார், அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படலாம் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Heavy Rain With Massive Thunder And Lightning

இதேவேளை, கடல் பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில், மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

கடற்பரப்புகளில் காற்றானது மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்குத் திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன் நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.