கொழும்பின் பிரபல பாடசாலையில் 10 வகுப்பு மாணவருக்கு நடந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை
கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பதினைந்து வயது பாடசாலை மாணவர் ஒருவர், மூன்று மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணைகளின் படி, குறித்த சம்பவம் நேற்று (11) காலை இடம்பெற்றுள்ளது.
நடைபெறவிருந்த வருடாந்த கிரிக்கெட் போட்டிக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனப் பேரணியில் கலந்துகொள்வதற்காக ஏனைய மாணவர்கள் வெளியே சென்றிருந்த காரணத்தினால், மூடப்பட்டிருந்த வகுப்பறைக்குள் ஜன்னல் வழியாக நுழைய அந்த மாணவன் முயற்சித்துள்ளார்.
திடீரென கால் தவறி கீழே விழுந்ததாகவும் கட்டிடத்தின் அருகில் இருந்த ஒரு மரக்கிளையும் உடைந்து விழுந்ததும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மேலும் சில மாணவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.