மத்திய கிழக்கில் தொடரும் தாக்குதல்கள் - இலங்கை மக்களுக்கு பேரிடியான செய்தி
மத்திய கிழக்கில் பதிவாகி வரும் பதற்றம் காரணமாக இலங்கையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய மத்திய கிழக்கு போர்ச்சூழல் உலக அளவில் எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதாரம், எரிபொருள் விலை, உணவு விலை உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்துகிறது.
இவ்வாறான சூழலில் நேற்று முன் தினம் முதல் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 317 ரூபாவாக உயர்ந்துள்ளது (முந்தைய விலை 293 ரூபாவாகும்) இதன்படி ஒரு லீற்றருக்கு 24 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
Octane 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 365 ஆக உயர்ந்துள்ளது (முந்தையது 340 ரூபாவாகும்) இதன்படி ஒரு லுீற்றருக்கு 25 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 303ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இதன்படி ஒரு லீற்றருக்கு 22 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 353 ரூபாவாக உயர்ந்துள்ளது, இதன்படி ஒரு லீற்றருக்கு 24 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 195 ரூபாவாக உயர்ந்துள்ளது இதன்படி ஒரு லீற்றருக்கு 13 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதனை தொடர்ந்து லிட்ரோ எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும் உள்ளது.
இதற்கிடையில், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.56 அதிகரித்து புதிய விலை ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையையும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 4,330 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 4,630 ரூபாவாகும். 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1,742 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 1,862 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் எதிரொலியாக சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இவ்வாறான சூழலில் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, இலங்கையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.