தனிமையில் வாடும் 6000 தாய்மார்கள்! சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிறழ்வு
சர்வதேச மகளிர் தினத்தை நேற்று (08.03.2026) பெரு விமர்சையாக கொண்டாடி பெண்கள் தொடர்பில் பெருமை கொள்ளும் நிலையில் 6869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தவிக்கின்றனர்.
அறுபது வயதுக்கு மேற்பட்ட 10535 சிரேஷ்ட குடிமக்கள் தற்போது முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
தரவுகளின்படி 6,869 தாய்மார்கள் மற்றும் 3,666 தந்தையர்கள் இவ்வாறு முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகத்தின் இயக்குநர் கே. சதுர மிஹிதும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தமாக 456 முதியோர் இல்லங்கள் இருந்தாலும், அவற்றில் தேசிய முதியோர் செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இல்லங்கள் 143 மட்டுமே என அவர் கூறினார்.
ஐந்து பேருக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் தேசிய முதியோர் செயலகத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இயக்குநர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு மையங்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெளிவாக இல்லாததால், முதியோரின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை திருத்தவும், அதன்படி முதியோர் இல்லங்களின் பதிவு மற்றும் கட்டுப்பாட்டிற்கான புதிய விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
முதியோர் இல்லங்களில் வசிப்பதால் அதிகமாக தாய்மார்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் முதியோர் இல்லங்களில் பெண்களே அதிகமாக உள்ளனர்.
துறையில் உள்ள அனுபவங்களின் அடிப்படையில் இத்தகைய நிலைகளைப் பார்ப்பது மிகவும் உணர்ச்சிகரமான விடயமாக இருக்கிறது. குழந்தைகள் வெளிநாடுகளுக்கு செல்லுதல், வேலைப் பளு போன்ற காரணங்களால் பெற்றோர் தனிமையில் தள்ளப்படுகிறார்கள்.

சிலர் பெற்றோரை உதாசீனம் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இந்த நிலைகளின் பின்னணி காரணங்களைப் பார்க்கும் போது ஒரு சிலரை எமக்கு குற்றம் சாட்ட முடியாது.
இது மிகவும் சிக்கலான சமூக நிலைமை. எனவே இதை சட்ட ரீதியாக மட்டும் அல்லாமல் ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.