தொடரும் போர் பதற்றம் : மத்திய கிழக்கிற்கான 57 விமான சேவைகள் இரத்து
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்றைய தினமும் (03) இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டிலிருந்து வெளியேறவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளைய (04) தினத்திலும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய இடங்களுக்குப் பயணிக்கும் விமானங்கள் தொடர்ந்தும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்கெவ்ல்ல தெரிவித்துள்ளார்.எனினும், இன்று காலை சில விமானப் பயணங்கள் மாத்திரம் அந்தப் பிராந்தியத்தின் ஊடாகப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.