காணி - வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்தத் துறையில் நிலவும் விலை மாபியாக்களை ஒடுக்குவதற்கும் புதிய ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை காணி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு இணங்க, காணி மற்றும் வீட்டுத் திட்டங்களின் விலைகளைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு மிக அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லாததால் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனை ஒரு மாபியா எனக் கருதலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சொத்துச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால், சாதாரண மக்கள் ஒரு வீட்டினை வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச சுட்டெண்ணின் படி, உலகிலேயே வீடு வாங்குவதற்குச் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கொழும்பில் ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கு, ஒரு குடும்பம் தனது முழு வருமானத்தையும் எவ்வித செலவுமின்றி சுமார் 55 ஆண்டுகள் சேமிக்க வேண்டியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அசாதாரண விலை உயர்வைத் தடுத்து, சாதாரண மக்களும் வீட்டு உரிமையாளர்களாவதை உறுதிப்படுத்தவே இந்த புதிய சட்டச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.