சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர  (G.C.E. O/L) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்று மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்று ராகம மருத்துவ பீடத்தின்  பேராசிரியரும் சிறப்பு மனநல வைத்தியருமான மியூரு சந்திரதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று இரவு நித்திரை இழந்து படிப்பில் ஈடுபடுவது பொருத்தமல்ல என்றும், மதச்சடங்குகளில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், இந்த குறுகிய காலப்பகுதியில் இதுவரை படிக்காத பாடங்களைப் படிக்க நேரத்தை வீணாக்காமல் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே படித்த பாடங்களை மீளாய்வு செய்வது மட்டும் போதுமானது என்றும் தேர்வுக்கு தோன்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தேர்வு வினாத்தாளை பெற்ற பின் முதல் 5 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், அந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்பதால் முதல் கேள்விக்கான பதிலை உடனே எழுத முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலாக, அந்த நேரத்தை வினாத்தாளை நன்கு வாசித்து எளிதில் பதிலளிக்கக்கூடிய கேள்வியைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எளிய கேள்வியைத் தேர்ந்தெடுத்து பதில் எழுதத் தொடங்குவது தேர்வுக்கு சிறந்த அணுகுமுறையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் எதிர்மறை அழுத்தத்தை குறைத்து நேர்மறை உந்துதலை உருவாக்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் சாதாரண தரத் தேர்வு நாளை (17) தொடங்கவுள்ளது.

இந்த முறை 3,545 தேர்வு மையங்களில் 451,463 தேர்வர்கள் சாதாரண தரத் தேர்வுக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.