தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும் - வைத்தியர்கள் எச்சரிக்கை

தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும் - வைத்தியர்கள் எச்சரிக்கை

தீர்க்கப்படாத தொழிசார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இலங்கையின் இலவச பொதுச் சுகாதார மற்றும் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையை மென்மேலும் தீவிரப்படுத்தத் தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி தமது அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய ரீதியிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர தமது மத்திய செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும் - வைத்தியர்கள் எச்சரிக்கை | Trade Union Action Will Intensify Doctors Warn

மருத்துவ சமூகம் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் தொழில்சார் சவால்களையே இந்த நடவடிக்கை பிரதிபலிக்கின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக வசதிகள் அல்லது கொடுப்பனவுகள் அன்றி, பெரும்பாலும் தனிப்பட்ட அபாயங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ சேவைத் தேவைகளுக்கு அப்பால் வைத்தியர்கள் ஆற்றி வந்த பணிகளிலிருந்து விலகியிருப்பதே தற்போதைய நடவடிக்கையாகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு அசௌகரியத்துக்கும் அரசும் சுகாதார அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மருத்துவ இடமாற்றங்களுடன் தொடர்புடையது எனச் சில தரப்பினரால் பரப்பப்படும் கருத்துக்களை அந்தச் சங்கம் நிராகரித்துள்ளது.

இடமாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் சில சிரேஷ்ட அதிகாரிகளின் திறமையின்மை காரணமாக சுமார் 8ஆயிரம் மருத்துவ இடமாற்றங்கள் இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில அதிகாரிகளால் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களால் முரண்பாடான பகிரங்க அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், இது அமைச்சுக்கும் அமைச்சரின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும் - வைத்தியர்கள் எச்சரிக்கை | Trade Union Action Will Intensify Doctors Warn

அரசியல் தலையீடின்றி முறையான நடைமுறைகளின் கீழ் மருத்துவ இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 23 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தமது சங்கம் கோருகின்றது என்றும், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை பரந்த அளவிலான கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசும் சுகாதார அமைச்சும் தமது கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்தால், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த ஏகமனதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, பொதுச் சுகாதாரத் துறையின் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைமையகத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் முடிவுகள் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.