இலங்கையை உலுக்கிய படுகொலைகள் : முக்கிய சந்தேகநபர்கள் கைது

இலங்கையை உலுக்கிய படுகொலைகள் : முக்கிய சந்தேகநபர்கள் கைது

தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி தெஹிவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் ஒன்றினுள் அதன் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் திகதி கொஹுவளை காவல்துறை பிரிவின் போதியாவத்தை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை ஆகிய இரண்டு குற்றச் செயல்களுக்கும் உடந்தையாக இருந்து உதவிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது, அவர்களிடம் இருந்து 14 கிராம் 730 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுடையவர்கள் என்பதுடன், இவர்கள் பொரலஸ்கமுவ மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையை உலுக்கிய படுகொலைகள் : முக்கிய சந்தேகநபர்கள் கைது | Suspects Who Assisted In Murders Arrested In Sl

வெளிநாட்டில் தங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிநடத்தலின் கீழேயே இவர்கள் இக்குற்றங்களுக்கு உதவியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.