அரச ஊழியர்களுக்கு விசேட வேலைநேர மாற்றம் : வெளியான சுற்றறிக்கை
ரமழான் காலத்தில் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக பண்டாரவினால் (Aloka Bandara) இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை ரமழான் பண்டிகைக்கான நோன்பு நோற்கப்படுகின்றது.
இதன்போது, இஸ்லாமியர்கள் தங்களது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வகையில், தொழில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் மத நடவடிக்கைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாளாந்த நேரங்களை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, காலை 3.30 மணி முதல் காலை 6.00 மணி வரை, மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை, மாலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை என அந்த நேரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, ரமழான் பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்னர் தகுதியான ஊழியர்களுக்குப் பண்டிகைக்கான முன்பணம் வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.