
இலங்கையில் பரவும் மற்றுமொரு நோய் தொற்று
இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சிக்கன்குன்யா உட்பட்ட நோய்களின் தாக்கம் நாட்டை பாதித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளது.
எலிக்காய்ச்சலை காவும் பக்டீரியா, நீர் அல்லது விலங்குகளின் சிறுநீரால் மண் மாசுபடும்போது, தோல் வெடிப்புக்கள் அல்லது வேறு வழிகளில் மனித உடலுக்குள் நுழைவதாக தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் துசானி தாப்ரே தெரிவித்துள்ளார்.
இந்த நோயினால் அதிகமாக இரத்தினபுரி, குருநாகல், கேகாலை மற்றும் களுத்துறை பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரையிலும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் இந்த நோய் தொற்று பொதுவாக அதிகரிக்கும் என்று துசானி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது என்றும், நோயைத் தடுக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.