பேருந்து சேவையில் புதிய திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு

பேருந்து சேவையில் புதிய திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு

பயணிகளுக்கு போக்குவரத்தில் ஏற்படும் சிரமத்தைக் கருத்திற் கொண்டு, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திலிருந்து சரக்கு போக்குவரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள், ஒரே பேருந்து நிலையத்திலிருந்து ஒரே நேர அட்டவணையைப் பின்பற்றிச் சேவையில் ஈடுபட வேண்டும் என, அரசாங்கம் விரும்புகிறது.

சில பகுதிகளில் இந்த இரண்டு வகை பேருந்துகளுக்கும், இருவேறு பகுதிகளில் பேருந்து நிலையங்கள் இருப்பதால், பயணிகள் போக்குவரத்தில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதனடிப்படையில், தனியார் பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டுத் திட்டமொன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.'' என கூறியுள்ளார்.