
அரச ஊழியர் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையில் (Srilanka) அரசு மற்றும் அரை - அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளதாக ஆய்வென்றின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆய்வின்படி அரச மற்றும் அரை - அரசத் துறைகளில் மொத்தம் 1,119,475 ஊழியர்கள் இருந்தனர் என்றும் 2024 ஆய்வில் இந்த எண்ணிக்கை 46,543 ஆல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தரவுகள் 2024 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் சுமார் 32,500 அரச மற்றும் அரை - அரச நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச மற்றும் அரை - அரச துறைகளில் மொத்தம் 1,150,018 ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களில் 50.5% ஆண்கள் மற்றும் 49.5% பெண்கள் என அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கையின்படி, அரசத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் (59.5%) மத்திய அரசின் கீழ் பணியாற்றுகின்றனர்.
எவ்வாறாயினும், அரை - அரச நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இராணுவம், கடற்படை, மற்றும் விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை என சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.