
5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பை 2500 ரூபாவிற்கு: அமைச்சரின் அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்படி 5000 ரூபா பெறுமதியான பை 2500 ரூபாவிற்கு வழங்கப்படும். அதற்கான பணிகளை தற்போது லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
5 கிலோகிராம் நாட்டு அரிசி இல்லையென்றால், அதற்கு பதிலாக 3 கிலோகிராம் நாட்டு அரிசி மற்றும் கோதுமை மாவை பெற்றுக் கொள்ளலாம். அல்லது சிவப்பு அரிசி மற்றும் 2 கிலோகிராம் கோதுமை மாவையும் பெறும் வாய்ப்பு உள்ளது.
அத்துடன் 2 கிலோகிராம் பெரிய வெங்காயம், 2 கிலோகிராம் உருளைக்கிழங்கு, 2 கிலோகிராம் பருப்பு, 1 டின் மீன், 3 கிலோகிராம் சிவப்பு சீனி, 2 கிலோகிராம் கோதுமை மா, 2 சமபோஷ பக்கட்டுகள், 70 கிராம் மற்றும் 90 கிராம் சோயாமீட் பக்கட்டுகள் 4 வழங்கப்படுகின்றன.
அதன்படி, 15 முதல் 17 கிலோகிராம் வரையிலான பொருட்கள் அடங்கிய ஒரு பை வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.